கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு கட்டங் கட்டமாக செயற்பாடுகளுக்கான அனுமதி அளித்துள்ளது
இதன் ஒழுங்கு முறைகள் தொடர்பாக மூன்று சுற்றுநிருபங்கள் வழிகாட்டல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பிரதானமானது, சுகாதார அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சு வெளியிட்டிருந்து.
அதன் பிறகு கல்வி அமைச்சு இரண்டு மேலதிக விளக்கங்களை வெளியிட்டிருந்தது.
15/2020 சுற்றுநிருபம் 2020.05.04 ஆம் திகதியும்
ED/01/12/06/05/01 இலக்க வழிகாட்டல் 2020.06.10 ஆம் திகதியும்
ED/01/12/06/05/01 இலக்க வழிகாட்டல் 2020.06.22 ஆம் திகதியும் வெளியிடப்பட்டன.
எனினும், இவ்வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் சரியான ஒழுங்குமுறையில் ஏனைய மாகாணங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாமையிலானல் ஏழு மாகாணங்களின் பாடசாலை நிர்வாகத்தைச் சார்ந்தோரிடையியே குழப்பத்தை உருவாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வழிகாட்டல்கள் அனைத்து மாகாணங்களுக்கும் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டிருப்பினும், மேற்கு மற்றும் சபராகமுவ மாகாணங்களைத் தவிர மற்ற 7 மாகாணங்களுக்கும் இதுபோன்ற அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
பாடசாலை நடைபெறும் காலம் தொடர்பான குழப்பம்
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல் சுற்றுநிருபத்தின் படி ஒவ்வொரு ஆசிரியரும் அவருக்கான பாடம் ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைக்கு சமூகளித்தல் போதுமானது என்பதோடு வரவு தொடர்பாகப் பதியப்படும் ஒப்பமிடும் ஒழுங்கு தொடர்பாகவும் பாடசாலை வருகைக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் இவை ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
அத்தோடு, இரண்டாவது கட்டத்தில் ஆரம்பமாகும் தரம் 5, 11, 13 வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருதல் கட்டாயமானதா இல்லையா என்பதை கல்வி அமைச்சு தெளிவு படுத்தத் தவறிவிட்டது.
அவ்வாறே, தரம் 2, 3 வகுப்புகள் ஆரம்பமாகும் திகதிகள் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படாத காரணத்தினால், தரம் 1, 2 க்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டுமா என்ற குழப்பத்தையும் சுற்றுநிருபம் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது ஆசிரியர் அதிபர்கள் தொழில் சங்கங்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாமல் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விளைவு எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
202.05.04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 15/2020 சுற்றுநிருபத்தின் படி. பாடசாலைகள் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெப்பமாணி பெற்று பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போது உடல் வெப்பம் அளக்கப்படத் தேவையில்லை என்றும், மாணவர்கள் முக க் கவசம் அணியத் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த முரண்பட்ட தகவல்கள் காரணமாக பாடசாலைகளைத் தயார்படுத்தும் ஒழுங்குமுறை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.