வாரத்தில் 4 நாட்கள் வேலை: காலை 7.30 முதல் 5.30 வரை வேலை நேரம் – மத்திய வங்கி பரிந்துரை
டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடனுதவியை தொடர்ந்தும் வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பது கடினமாகும் என்பதால், அதற்கான கடனை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் சுமார் 56 பில்லியன் ரூபாவை (28 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுத்தாபனத்திற்கு மேலும் கடனுதவி வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதற்கும் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
எரிபொருள் விற்பனையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்க்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை கணிசமான அளவில் அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.
இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5:30 மணிவரை தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்குள் பணிபுரியும் ஊழியர்களை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
தனியார் வாகனங்களின் பாவனையை குறைத்து பொதுப் போக்குவரத்திற்கு மாற்றுமாறும் மத்திய வங்கி கோரியுள்ளது. இதேவேளை, நெருக்கடி நிலை மற்றும் எரிபொருளை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கியின் பிரேரணை கோரியுள்ளது.