சப்ரகமுவ மாகாணத்தில் 525ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் 63இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தின் இரு மாடிக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 200தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 525ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
சப்ரகமுவ மாகாணத்தில் காணப்படும் தமிழ்மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பட்டதாரிகளிடம் அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டது. இதன்போது 260பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
இதனால் மாகாணத்திலுள்ள தமிழ்மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களை முழுமையாக நிரப்பமுடியாமல் போய்விட்டது. போதியளவு தமிழ் மொழிமூல பட்டதாரிகள் இல்லாத காரணத்தினால் கல்விப்பொது தராதர உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களை மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் பிரதேச மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவேண்டுமென்று கோரிக்கை முன் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.