தாம் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும பொருட்டான பாதுகாப்பான மென்பொருள் தொகுதியொன்றை விரைவில் கட்டியெழுப்புவோம் என, ஹுவாவி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களில் கூகிள் நிறுவனம் மேற்கொண்டுள்ள தடையை அடுத்து ஹுவாவி நிறுவனம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட் சாதன வழங்குனர் வரிசையில் அப்பிள் சாதனங்களை பின்தள்ளி இரண்டாவது இடத்தில் ஹுவாவி நிறுவனம் திகழ்கின்றது.
கடந்த புதன்கிழமையன்று (15), அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவியின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் தாம் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும பொருட்டான பாதுகாப்பான மென்பொருள் தொகுதியொன்றை விரைவில் கட்டியெழுப்புவோம் என இது தொடர்பில் ஹுவாவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“Huawei நிறுவனம், உலகளாவிய ரீதியில் Android இன் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. Android இன் மிக முக்கியமான சர்வதேசப் பங்காளர்களில் ஒருவர் எனும் வகையில் நாம் அவர்களது திறந்த இயங்குதளமான (இலவச இயங்குதளமான Open Source) Android தளத்தை பயன்படுத்தி வந்தோம். பாவனையாளர்கள் மற்றும் தொழிற்துறை ஆகிய இரு பிரிவினருக்கும் நன்மையளிக்கும் வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம்.இது வரை விற்பனை செய்யப்பட்டுள்ள Huawei மற்றும் Honor ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட் சாதனங்கள் ஆகிய உற்பத்திகள் மற்றும் உலகளாவிய ரீதியில் கையிருப்பிலுள்ள சாதனங்கள் அனைத்திற்கும், அதற்கு அவசியமான பாதுகாப்பு மேம்பாடுகள் (Security Updates) மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை Huawei தொடர்ந்தும் வழங்கும்.அத்துடன் உலகாளவிய ரீதியில் அனைத்து பாவனையாளர்களும் விரும்பும் வகையிலான சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலான, பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மை கொண்ட மென்பொருள் தொகுதியொன்றை நாம் கட்டியெழுப்புவோம்.இலங்கையில் தற்போது சந்தையிலுள்ள மற்றும் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள Huawei ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களுக்கும் தொடர்ந்தும் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் எனும் உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி – தினகரன்