எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று (18) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. Zoom ஊடாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறுவதா அல்லது வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதா என்பது தொடர்பில் இக்கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்கள் காரணமாக தற்காலிகமாக அருகிலுள்ள பாடாசலையில் மாணவர்களை இணைப்பதற்கான முறைமை ஒன்று அமைக்கப்படுவதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் கோபா குழுவிடம் வெளிப்படுத்தினர்.
டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் இது செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, போக்குவரத்து பிரச்சினைகளை குறைப்பதற்காக ஆசிரியர்களை அவர்களின் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கி கல்விச் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
.