நாடு முழுவதும் பாடசாலைகளில் சுமார் 15,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும், இடமாற்றங்களுக்காக காத்திருக்கும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனால் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களின் விளைவாக, கஸ்டப் பிரதேசத்தில் நியமனம் பெற்று இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பிரதியீட்டுடனான இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இடமாற்றத்திற்காக வேறொருவரை தேடிக் கொள்ள முடியாததால் இடமாற்ற இணக்கப்பாடு கிடைத்தும் இடமாற்றத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கடுமையான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்ட போதிலும் அதற்கான நியமனங்களை துரிதப்படுத்த வில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்றை நெறிகளை பூரத்தி செய்த 5,000 ஆசிரியர்கள் நியமத்திற்காக காத்துள்ளனர். அவர்களின் பாடநெறி பூர்த்தி செய்யப்பட்டிருப்பினும் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
அவர்களுக்கு நியமனம் வழங்குவதன் ஊடாக இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதே நேரம், பாடசாலை உளவளத்துணை ஆசிரியர் நியமனத்திற்கான நேர்காணல் நிறைவு செய்யப்பட்டு, தேர்வு இடம்பெற்று 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கும் இன்னமும் நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவற்றை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.
Very important. .