இன்றைய சூழலில் நல்ல ஆளுமையும், சமூக இணக்கப்பாடும் கொண்ட மனிதவளவிருத்தி தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் பிள்ளையின் ஆளுமை விருத்தி என்பது முக்கியமாகின்றது. இதனால் பாடசாலையின் சமூகமாற்றத்திற்கான முக்கிய கருவியாகக் காணப்படுகின்ற ஆசிரியர்கள் முக்கியத்துவம் வகிக்கின்றனர்.
வெறுமனே ஒருவரின் வெளித்தோற்றத்தை மாத்திரம் வைத்து அவரின் ஆளுமையை விளங்கிக் கொள்ள முடியாது. குறிப்பிட்டவரிடம் இருந்து வேறுபடுத்த முடியாததும், விசேடமானதும், நிலையான நடத்தையும் கொண்ட ஒரு பரந்த அமைப்பே ஆளுமையாகும். அறிவு, திறன், மனப்பாங்கு, கவர்ச்சி, உளச்சார்பு, சூழலுடனான சிறந்த தொடர்பு, உணர்வு, சிறந்த செயற்பாடு என்பவற்றின் விளைவாக ஆளுமை விருத்தி அடைகின்றது.
உலக மாற்றத்திற்கு ஏற்ப புதிய சூழல்கள் தோற்றம் பெறுகின்றன. இதற்காக ஆசிரியர்களின் வகிபாகம் மாற்றம் அடைந்து கொண்டு வருகின்றது.பாடசாலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கு ஆளுமை விருத்தியை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.தேர்ச்சி என்பதும் பிள்ளையின் ஆளுமையுடன் தொடர்புடைய விடயமாகும். அறிவு, திறன், மனப்பாங்குகளை விருத்தி செய்யும் பொருட்டு தொடர்பாடல், ஆளுமை விருத்தி, சூழல், வேலை உலகிற்கு தயார் செய்தல், சமயமும் ஒழுகலாறும், ஓய்வுநேரத்தை பயன்படுத்துதல், விளையாட்டு, ,’கற்றலுக்குக் கற்றல்’ தொடர்பான தேர்ச்சிகள் போன்ற 07 வகை தேர்ச்சிகளை மாணவர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரிய சமூகத்திடம் காணப்படுகின்றது. அதற்கு ஆசிரியர் சிறந்த உலவியல் தத்துவார்த்தப் பின்புலத்தை ஆற்றலை கொண்டிருத்தல் வேண்டும்.
வெறுமனே பேச்சு, வினாவிடை மூலம் அறிவை மாணவர்களுக்கு வழங்காமல் தேடி ஆய்வில் ஈடுபட்டு அனுபவங்களின் ஊடாக அறிவையும், விளக்கத்தையும் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஆசிரியர் வழங்க வேண்டும். இதற்காக ஆசிரியர் விரிந்த சிந்தனையும், சிறந்த ஆளுமையும் கொண்ட பல்வேறு வகிபாகங்களை நிறைவேற்ற வேண்டிய வாண்மைத் தகைமைகளை உடையவராக இருத்தல் வேண்டும்.
ஆக்கபூர்வமான கற்றல் சூழலை ஆசிரியர் உருவாக்க வேண்டும். ஆசிரியர் பல நுட்பமுறைகளை தனது கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் வினாக்களை முன்வைத்தல், படங்கள், பத்திரிகைகள், விளம்பரங்கள், காட்சிகள், அட்டைகள் போன்றவறை பயன்படுத்தி ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் விடய ஆய்வு, கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் கற்பித்தலில் ஈடுபடும் போது மாணவர்களுக்கு அறிவை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்தி ஆளுமை விருத்தியை மேம்படுத்தலாம்.
வினைத்திறனும், விளைத்திறனும் கொண்ட சிறந்த சூழலை உருவாக்கக் கூடியவராக ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும். இதன் மூலம் ஆசிரியர் வெறுமனே கல்வியை போதிப்பவராக மாத்திரம் இல்லாமல் சகல துறைசார் அறிவையும், கற்றல் கற்பித்தல் நிபுணத்துவத்தையும் வழங்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
பாடசாலையில் ஆசிரியர், மாணவர்கள் தொடர்பு சிறப்பாக காணப்பட வேண்டும். அந்த வகையில் ஆசிரியர்கள் அவதானிப்பு முறை, அக நோக்குமுறை, வினாக்கொத்துமுறை, தனியாள் முறை, புள்ளிவிபரவியல் முறை போன்ற கல்வி உளவியல் முறைகளைக் கொண்டு மாணவர்களை அவர்களின் இலக்கை நோக்கி வழிகாட்ட ஒரு உந்துசக்தியாக ஆசிரியர்கள் காணப்பட வேண்டும்.
தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு தேரச்சியை அடைவதற்காகவே ஆசிரியர் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை திட்டமிட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சியை அடைந்துள்ளார்களா என்ற விடயம் தொடர்பாக ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே பிள்ளையின் ஆளுமை விருத்தி என்பது பன்முக நோக்கம் கொண்டது. இவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு தேர்ச்சியுள்ளவராகவும், வகுப்பறையில் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் சூழலில் பல்வேறு வகிபாகங்களை வகிப்பதன் மூலம் மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியும். அந்தவகையில் மாணவர் ஆளுமை விருத்தியில் ஆசிரியர் வகிபாகம் மாறி வருகின்ற உலகின் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.
மு.ஜ.பா. ஸஜீதா
(02ம் வருடம், கல்வியியல் சிறப்புக் கற்கை கல்வி,
பிள்ளை நலத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)
(02ம் வருடம், கல்வியியல் சிறப்புக் கற்கை கல்வி,
பிள்ளை நலத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)
(Thinakaran)