(ஜே.ஜே)
ஓய்வில்லாமல் கழியும் நாட்களில் மனதும் உடலும் அடையும் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. விடுமுறையை பயனுள்ள வழிகளில் கழிப்பது முக்கியமானது. ஏனெனில் விடுமுறை கடந்த வருட கற்றல் செயற்காடுகளை மதிப்பிட்டு மீள ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும் எதிர்வரும் வருடங்களில் கற்றல் செயற்பாடுகளைச் சிறப்பாகத் திட்டமிட்டுக் கொள்வதற்கும் புத்துணர்வோடு அடுத்த கல்வியாண்டில் ஈடுபடுவதற்கும் பங்களித்து வழிசெய்யும்.
விடுமுறையில் பிள்ளைகளைச் சுதந்திரமாக விட்டுவிடுவது பல்வேறு வழிகளில் பாதிப்பாக அமைந்துவிடுகின்றது. அதே நேரம் அதிக கட்டுப்பாட்டுடன் அவர்களை மேற்பார்வை செய்வதிலும் பாதிப்புக்கள் இருக்கின்றன.
எனவே, சில வரையறைகள் மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகள் மற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்கள் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பெற்றொர் வழிகாட்டுவது பொருத்தமாக அமையும்.
பின்வரும் அம்சங்கள் அம்சங்களை வழிகாட்டல்களாக முன்வைக்க முடியும்
1. அடிப்படை வணக்கங்களை உரிய வேளைகளில் நிறைவேற்றப் பயிற்றுவித்தல்.
பாடசாலை நாட்களில் அடிப்படையான தொழுகைகள் மற்றும் இதர அம்சங்களை நிறைவேற்ற பிள்ளைகளுக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே விடுமுறையில் தொழுகையை உரிய நேரத்தில் முன் பின் சுன்னத்களுடன் ஜமாஅத்தாக தொழுவதற்கு பழக்க வேண்டும். பள்ளிவாசலுடனான தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தினமும் ஓதி வர வேண்டிய அவ்ராதுகளை ஓதுவதற்கும் அல்குர்ஆனின் குறிப்பிட்ட பகுதிகளை ஓதுவதற்கும் பயிற்றுவிக்க வேண்டும்.
ஏனெனில், அவை மனதிற்கு அமைதியையும் சந்தேசத்தையும் தருவதோடு வாழ்வின் அதிக பரக்த்தையும் இறை பொருத்தத்தையும் வழங்கும் என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். இவற்றை ஒரு கட்டளையாக அல்லாமல் அவர்களின் சுய விருப்பு மற்றும் அவர்களுடன் இணைந்து பெற்றோரின் பங்குபற்றுதல் முதலான உத்திகளினூடாக நிறைவேற்றச் செய்வது பொருத்தமானது.
2. உடலையும் மனதையும் பாதிக்கும் திரைப்படங்களிலிருந்து விலகிஇருத்தல்
– விடுமுறை தினங்களின் காலை முதல் மாலை வரை சிறுவர்களுக்கான திரைப்படங்களும் விசேட கார்டூன் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. மாணவர்கள் அவற்றில் மூழ்கிவிடுகின்றனர். எனவே, பொதுவாக நடைபெற வேண்டிய உடலியக்கம் தடைப்படுவதனால் அவர்கள் பாதிப்படைகின்றனர். இவ்வாறான திரைப்படங்கள் மாணவர்களை மனஉழைச்சலுக்கு உள்ளாக்குவதோடு தாம் அவ்வாறான ஹீரோக்களாக இல்லையே எனும் கவலையை உண்டாக்குகின்றதாக கண்டறிந்துள்ளனர்.
எனவே, திரைப்படங்கள் கார்டூன்கள் முதலியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளல் முக்கியமானது.
-கணினி விளையாட்டுக்கள் பிள்ளையின் உடல் வளர்ச்சியைப் பாதிப்பதோடு பிள்ளையின் மூளையின் செயற்பாட்டை வன்முறைக்கு சார்பானதாக மாற்றுகின்றது. மனஅழுத்தம், மற்றும் பதகளிப்பு முதலானவற்றுக்கு பிள்ளைகள் உள்ளாகுகின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையாதலுக்கு சமனான விளைவுகள் பிள்ளைகளுக்கு இதன் மூலம் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
எனவே, கணினி சார்ந்த விளையாட்டுக்கள் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கள் முதலானவற்றை முடியுமான வரை தவிர்ந்து கொள்ளுதல் முக்கியமானது. சில சந்தர்ப்பங்களில் பொருத்தமான கல்வி சார்ந்த விளையாட்டுக்களை குறிப்பிட்ட நேரம் மாத்திரம் வரையறுத்து விளையாடுவதற்காக வழங்க முடியும்.
எனினும் மிக நீண்ட நேரம் விளையாடுதல் பாதிப்பானது.
3. பிள்ளைகளின் உள வெளிப்பாடுகளுக்கான களம் அமைத்துக் கொடுத்தல்
– கல்வி நடவடிக்கைகளில் அலுப்படைந்த மாணவர்களது உள்ளங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் அதே வேளை உளத்தில் வெளிப்பாடுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்கு சந்தரப்பம் வழங்கப்படல் வேண்டும்.
பட்டம்விடுதல், களப் பயணங்களை மேற்கொள்ளல், சுற்றுலாக்கள் செல்லுதல் மற்றும் நாடக அரங்குகள், ஓவியம் வரைதல் முதலானவை பிள்ளைகள் தமது கருத்துக்களையும் தமது உள்ளத்தில் அடக்கி வைத்திருப்பவற்றையும் வெளியிடவும் அவற்றிருந்து மீளவும் சந்தர்பபத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே பிரதேசத்தின் வசதி மற்றும் மாணவர்களின் இயல்பு முதலானவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான செயற்பாடுகளை பெற்றோர் திட்டமிட்டுக் கொள்வது கட்டாயமானது.
4. திறனொன்றை வளர்த்துக் கொள்ள வழிகாட்டல்
விடுமுறையை அர்த்தமுள்ளதாகவும் எதிர்காலத்திற்கான முதலீடாகவும் கழிப்பதற்கும் வழிகாட்ப்படல் வேண்டும். பிள்ளைகள் விரும்பும் திறன் ஒன்றை வளர்த்துக் கொள்ள வழிகாட்டுவது பொருத்தமானது. கணனி தட்டச்சு, பேச்சாற்றல், சமையல், தற்பாதுகாப்புக் கலைகள், நீச்சல், வரைதல் முதலானவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
பிள்ளைகள் இவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களது உள்ளத்திற்கும் உடலுக்கும் எதிர்காலத்திற்குமான முதலீடாக அமையும்.
5. வாசிப்பு பழக்கத்தை அதிகரித்தல்
விடுமுறை தினத்தில் வாசித்து முடிக்க வேண்டிய நூல்களை வாசிகசாலையில பெற்றுக் கொண்டு அல்லது புத்தக நிலையங்களில் வாங்கி அவற்றை வாசிப்பதற்கு வழங்கலாம். ஆனால் அது பாடசாலைப் பாடங்களுடன் தொடர்பான நூல்களாக அல்லாமல் வெளிஉலகு தொடர்பானதும் பொதுவானதுமாக அமைந்திருப்பது விரும்பத்தக்கது. விஞ்ஞானக் கதைகள், நாவல்கள், சிறுகதைகள், சுவாரஸ்யமான கட்டுரைகள் முதலானவை ஏற்புடையது.
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதைப் போன்று வாசித்ததை பிறருன் பகிர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
6. செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்
வீட்டுச் செயற்பாடுகள் அல்லது பிரதேசத்தில் நடைபெறும் பொது வேலைகளில் ஈடுபடுத்தல் சமூக உணர்வையும் பிறருடனான தொடர்புகளையும் வலுப்படுத்தும்.
வீட்டு நிகழ்வுகளில் பொறுப்புக்களை வழங்குதல், பிரதேசத்தில் சிறியளவிலான சிரமதானங்களை ஒழுங்கு செய்தல், விழாக்களை ஒழுங்கு செய்து நடாத்துதல், போட்டிகளை நடாத்துதல் முதலான பணிகளில் ஈடுபடுவதற்கு வழிகாட்ட முடியும்.
7.புத்தாக்க சிந்தனைக்கு சந்தர்ப்பம் வழங்குதல்
மாணவர்கள் கண்டுபிடிப்பு மற்றும் இதர புத்தாக்க செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால் பாடசாலை நாட்களில் அதற்கான சந்தர்பபம் கிடைப்பதில்லை. எனவே விடுமுறையில் அவ்வாறாவற்றிக்கு சந்தர்பபங்கள் வழங்க முடியும். உடைந்த மின்சாதனப் பொருட்களை திருத்துதல்இ சைக்கிள் முதலானவற்றை திருத்துதல் முதலானவற்றில் ஈடுபடுத்தலாம்.
8. படிப்பினை தரும் இடங்களை தரிசித்தல்
படிப்பினை தரும் இடங்களை தரிசித்தல் மாணவர்களிடம் புத்துணர்ச்சியை வழங்கும் என்பதோடு தமது இலக்குகளையும் தமது எதிர்காலத்ததையும் பற்றி சிந்திப்பதற்கு சந்தர்பமாக அமையும். அருகிலுள்ள கல்வி நிலையம், அல்லது முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நூதனசாலை முதலானவற்றிக்கு அழைத்துச் செல்லலாம்.
9. வயது வந்த மாணவர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவற்கான சிறிய பரீட்சார்த்மான செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.
பிரதேச நிகழ்வுகளில் தன்னார்வத் தொண்டராக பணியாற்றுதல், பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஈடுபடல், சிரமதானங்கள் மற்றும் அழகுபடுத்தல் செயற்பாடுகளை ஒழுங்கு செய்து ஈடுபடல் என்பன தமது திறன்களையும் பிறருடனான தொடர்பாடல் திறனை வளர்க்கவும் நிர்வாகத் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
10. சொந்த பந்தங்கள் நண்பர்களுடனான தொடர்பை மீளப் புதுப்பித்தல்
சந்தடிமிக்க வாழ்வில் இரத்த சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை. எனவே, சொந்த பந்தங்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், நண்பர்களுடன் பொழுதைக் கழப்பதற்கும் அவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். தமது குடும்ப சொந்த பந்தங்கள் பற்றிய தொகுப்பை தயாரிக்கவும் அவர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் பிள்ளைகளை வழிப்படுத்தலாம்.