நேற்றுப் பெறப்பட்ட பீசீஆர் பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜாங்கனை பிரதேச 90 மாணவர்கள் மற்றும் ஹபராதுவ பிரதேச பாடசாலையின் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட நேற்று பெறப்பட்ட மாதிரிகளின் பீசீஆர் அறிக்கைகள் இன்று வெளியாகவுள்ளன.
ஹபராதுவ மற்றும் ராஜாங்கனை பிரதேசங்களில் அதிகளவானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
முதன் முதலாக பாடசாலைமாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று பதிவாகியது.
கந்தக்காடு புனர்வாழ்வளிப்பு மையத்தின் ஆலோசகர் ஒருவரின் மகனான தரம் 5 இல் கற்கும் மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இம்மாணவன் கலந்து கொண்ட வகுப்புகளின் மாணவர்களை தேடும் முயற்சி நடைபெறுகிறது.
ராஜாங்கனை பிரதேசத்தில் 90 மாணவர்கள் உட்பட 150 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர பிரதேச தொற்று நோயியல் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கந்தக்காடு புனர்வாழ்வளிப்பு நிலையத்தின் கடமையாற்றும் மாரவிலயைச் சேர்ந்த ஆலோசகர் தொற்றுக்குள்ளானதாக இனம்காணப்பட்டார்.
அவருடைய தாயார் மேலதிக வகுப்பு ஆசிரியையாக கற்பிப்பவர் என்றும் பல வகுப்புக்களை நடாத்தியுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தினூசா பெர்னாந்தோ தெரிவித்தார்.
இன்று கிடைக்கும் பீசிஆர் முடிவுகளின் படி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.