இலங்கையின் அரசாங்கத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் ஐந்து இலட்சத்து 86 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் தமது சேவைக் காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியதாகும்.
என்றாலும் இவ்வரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பெறும் ஓய்வூதிய சம்பளத்தில் முரண்பாடுகள் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இம்முரண்பாடுகளை சீரமைத்துத் தருமாறு அவர்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்நாட்டில் ஓய்வூதியம் பெறும் அரசாங்க ஊழியர்களின் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் நியாயமான கண்கொண்டு நோக்கினார். அதற்கேற்ப 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஓய்வூதியம் பெறும் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதற்கான யோசனையை அவர் முன்வைத்தார்.
இந்த அடிப்படையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் முகம் கொடுத்துள்ள சம்பள முரண்பாடு ஜுலை முதலாம் திகதி முதல் நீங்கி விடும் என்று அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.
இதற்கிணங்க, 2016 பெப்ரவரி 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றுநிரூபம் இலக்கம் 03, 2016 இரண்டு உப ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கான சம்பளத்தின் அடிப்படையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இதற்கேற்ப, தற்போது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை ஓய்வூதியம் பெறும் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கான தீர்வு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஏ. ரத்னசிறி சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும், திணைக்களங்களின் தலைவர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு அமைய 2017 ஜனவரி முதலாம் திகதி முதல் அதற்கு முன்பிருந்து ஒய்வூதியம் பெறும் சகல அரசாங்க ஊழியர்களினதும் ஓய்வூதியச் சம்பளம் 2016 பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொதுநிர்வாக சுற்றுநிரூபம் மற்றும் உப ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி மறுசீரமைக்கப்பட உள்ளது.
இதன் பயனாக இந்நாட்டிலுள்ள ஐந்து இலட்சத்து 86 ஆயிரம் அரசாங்க ஓய்வூதியர்கள் நன்மை அடைய உள்ளனர். அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையின் பிரதிபலனாக ஓய்வூதியம் பெறும் கீழ்மட்ட அரச ஊழியர் ஒருவரின் ஆகக் குறைந்த சம்பளம் ரூபா 1600.00 ஆகவும், தரம் ஒன்று ஆசிரியரின் சம்பளம் ரூபா 4600.00 ஆகவும், அமைச்சுக்களின் செயலாளர்களின் சம்பளம் ரூபா 12,000.00 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த மதிப்பீடானது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற, 25 வருட கால சேவையைப் பூர்த்தி செய்துள்ள ஓய்வூதியம் பெறுவோரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கவென வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 120 கோடி ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்நடவடிக்கை இந்நாட்டுக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றி ஒய்வு பெற்றுள்ளவர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது சேவைகளுக்கு பெறுமதி சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களது தேவைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தான் உண்மையான மக்கள் சேவையாளனின் பண்பாகும். அந்தடிப்படையில் தான் அமைச்சர் மங்கள சமரவீர இந்நாட்டின் ஐந்து இலட்சத்து 86 ஆயிரம் அரசாங்க ஓய்வூதியக்காரர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். இதன் ஊடாக ஒரே நேரத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தவர் என்ற பெருமையையும் கௌரவத்தையும் அவர் பெற்றுக் கொள்கின்றார்.
அமைச்சரின் இந்நடவடிக்கை ஓய்வூதியக்காரர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் அமைகின்ற அதேநேரம், அவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் பெறும் அரசாங்க ஊழியர்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினதும், அரசாங்கத்தினதும் இந்நடவடிக்கையை வரவேற்று இருக்கின்றனர்.
ஆகவேதான் நாட்டு மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் நியாயமான கண்கொண்டு நோக்கும் அரசாங்கத்தின் மக்கள் நல வேலைத்திட்டங்களுக்கு அற்ப அரசியல் நலன்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவே நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் பக்கத் துணையாக அமையும்.