மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.
இதன்படி தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை நவம்பர் 9 ஆம் திகதி திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை நீடிக்கப்பட்டது.
இதற்கிடையில் பாடசாலைகளை திறப்பதற்கான போதிய சுகாதார நெறிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன வழங்க வில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வியாழன் தீர்மானம் எடுத்து கல்வி அமைச்சு மாலையில் பாடசாலைகள் மீளத் திறப்புக்கான அறவிப்பை வெளியிட்டது. பாடசாலை திறப்புக்கான குழுவை நியமித்து தேவையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.
எனினும் இந்த 3 நாட்களுக்குள் குழு அமைத்து பாடசாலைகளை முழுமையாக தொற்று நீக்க கால அவகாசம் போதாது என்றும் இது தொடர்பாக பாடசாலை சமூகம் போதிய அறிவுறுத்தலை கல்வி அமைச்சில் இருந்து பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாற்றீடாக தரம் 11க்கு மேலுள்ள வகுப்புக்களை 23 ஆம் திகதியும் ஒரு வாரம் கழித்து ஏனைய வகுப்புக்களையும் ஆரம்பிக்க திட்டமிடுமாறு கல்வி அமைச்சிடம் ஆசிரிய தொழில் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதிபர்களின் பொறுப்பில் பாடசாலைகளை ஆரம்பிப்பதை போட்டு விட்டு கல்வி அதிகாரிகள் பாடசாலைகள் நடைபெறும் என்று கற்பனை செய்வார்களாயின் அதனை எதிர்பார்க்க முடியாது என கல்வி வாண்மையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் ஏற்பாடுகளை வழங்கும் பொறுப்பு அதிபர்களுக்கு இல்லை என்றும் அதற்காக பயிற்றப்பட்ட அதிகாரிகள் சுகாதார துறையில் உள்ளனர் என்றும் அதிபர்களை பலியிட வேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து அதிபர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்க விடுத்துள்ளார்.
.